டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை தொடர்ந்து இலவசமாகவே இருக்கும் என்றும், யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எந்தக் கட்டணமும் அல்லது வரியும் விதிக்கப்படாது என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெளிவுபடுத்தியுள்ளார்.

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் வரிவிதிப்பு மற்றும் இதர சட்டங்கள் (திருத்த) மசோதா நிறைவேறியது. மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, மாநிலங்களவையிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

இம்மசோதா குறித்துப் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இச்சட்டம் புதிதாக எந்த வரியையோ அல்லது பரிவர்த்தனைக் கட்டணத்தையோ முன்மொழியவில்லை என்று தெரிவித்தார். யுபிஐ தொடங்கப்பட்டதிலிருந்தே பொதுமக்களுக்கு இலவசமாகவே வழங்கப்பட்டு வருவதாகவும், இந்தியர்கள் அனைவரும் எந்தவித கட்டணமுமின்றி இந்தச் சேவையைத் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றும் அவர் உறுதியளித்தார்.

வரிவிதிப்பு மற்றும் இதர சட்டங்கள் (திருத்த) மசோதா 2026, பணம் செலுத்துதல் மற்றும் தீர்வுமுறைகள் சட்டம் 2007, வருமான வரிச் சட்டம் 2025, நிதிச் சட்டம் 2026 ஆகிய மூன்று முக்கிய சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்கிறது. பணம் செலுத்துதல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டதால், யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்தது.

எதிர்காலத்தில் யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிக்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டாலும், அந்தச் சுமை பொதுமக்கள் மீது விழாது என்றும், அது பெரிய வணிகர்களிடம் மட்டுமே வசூலிக்கப்படும் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.