தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்கும் பணிக்கான பயிற்சி முகாமினை மாநகராட்சி ஆணையர் பிரியங்கா தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் தெருநாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, நாய்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடவுள்ள பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கான சிறப்புப் பயிற்சி முகாம் நடைபெற்றது.

இக்கணக்கெடுப்புப் பணி 'வேர்ல்ட் வெட்டரினரி சர்வீஸ்' (World Veterinary Service) மற்றும் 'டாக்ஸ் ஆஃப் கோயம்புத்தூர்' (Dogs of Coimbatore) ஆகிய அமைப்புகளின் தொழில்நுட்ப வழிகாட்டுதலுடன் நடத்தப்படுகிறது. தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மாணவர்கள் தன்னார்வலர்களாகப் பங்கேற்று, தரவு சேகரிப்பு மற்றும் கணக்கெடுப்பு முறைகள் குறித்த பயிற்சியைப் பெற்றனர்.

பயிற்சி முகாமினை மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா தலைமையேற்றுத் தொடங்கி வைத்தார். பயிற்சி முகாமில் மாநகராட்சி ஆணையர் பேசியதாவது: மாநகரப் பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கையைத் துல்லியமாகக் கணக்கெடுத்து, அதன் அடிப்படையில் விலங்குகள் பிறப்புக் கட்டுப்பாடு (ABC) அறுவை சிகிச்சைகள் மற்றும் வெறிநோய் தடுப்பூசி (Anti-Rabies) செலுத்தும் பணிகளை முறைப்படி திட்டமிட்டுச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்படும் இந்தத் தெருநாய்கள் கணக்கெடுப்புப் பணிக்கு பொதுமக்கள் மற்றும் குடியிருப்போர்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.