தூத்துக்குடியில் பைக் மீது லாரி மோதிய விபத்தில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேற்கு வங்க மாநிலம், பஸ்சிம் மேதினிபூர் மாவட்டம், மிர்சாபூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் தாஸ் மகன் கோகன் தாஸ் (28). இவர் தூத்துக்குடி புதிய துறைமுகப் பகுதியில் கட்டப்பட்டு வரும் விளையாட்டு மைதானக் கட்டிடத்தில், தனியார் கட்டுமான நிறுவனத்தின் கீழ் கடந்த ஒரு மாதமாகக் தங்கிப் பணியாற்றி வந்தார்.

இன்று கோகன் தாஸ் முத்தையாபுரம் பகுதியில் உள்ள கடைக்குச் சென்றுவிட்டு தனது பைக்கில் தெர்மல் நகர் விலக்கு நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது, சரக்கு ஏற்றிவிட்டு வந்த 40 அடி கண்டெய்னர் லாரி எதிர்பாராதவிதமாகக் கோகன் தாஸின் பைக் மீது மோதியது. இந்த கோர விபத்தில் பலத்த காயமடைந்த கோகன் தாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்து குறித்துத் தகவல் அறிந்து வந்த தெர்மல் நகர் காவல்துறையினர், கோகன் தாஸின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காகத் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக லாரி ஓட்டுநரான தூத்துக்குடி முள்ளக்காடு தேவி நகரைச் சேர்ந்த ராஜீவ் காந்தி (34) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.