தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே ஓய்வுபெற்ற டிக்கெட் பரிசோதகரிடம் பைக்கில் வந்த இருவர் செல்போனைப் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி கிப்சன்புரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வமணி. இவரது மகன் ஜான் கென்னடி (63). இவர் அரசுப் போக்குவரத்துக்கழகத்தில் டிக்கெட் பரிசோதகராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். ஜான் கென்னடி இன்று காலை 6 மணியளவில் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.
பேருந்து நிலையம் அருகிலுள்ள ஜவுளிக்கடை முன்பாகச் சென்றபோது, பின்னால் பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள், ஜான் கென்னடியின் சட்டப் பையிலிருந்த ரூ.10,000 மதிப்பிலான செல்போனைப் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.
இச்சம்பவம் குறித்து ஜான் கென்னடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, செல்போன் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

