தூத்துக்குடி வி.இ.ரோட்டில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக அமைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை, காவல்துறையினரின் உதவியுடன் மாநகராட்சி நிர்வாகத்தினர் அகற்றினர்.
தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் தற்காலிக மற்றும் நிரந்தர ஆக்கிரமிப்புகள் வாரந்தோறும் அகற்றப்பட்டு வருகின்றன. இருப்பினும், விதிகளை மீறி விளம்பரப் பலகைகள் மற்றும் பதாகைகள் வைப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள், குறிப்பாகப் பெண்கள், மாணவ - மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து வணிக நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து மாநகராட்சிக்குத் தொடர்ச்சியாகப் புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் காவல்துறையினரின் உதவியுடன் வி.இ.ரோடு பகுதியில் சிறப்பு அகற்றும் பணி இன்று மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, சாலையோர ஆக்கிரமிப்புகள், தற்காலிகத் தடுப்புகள், பதாகைகள் மற்றும் மின்கம்பங்களில் விதிமுறைகளுக்கு முரணாகத் தொங்கவிடப்பட்டிருந்த அறிவிப்புப் பலகைகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பொருட்கள் உடனடியாக அகற்றப்பட்டன.
இந்த ஆக்கிரமிப்புகள் மற்றும் பதாகைகள் அகற்றும் பணி மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் தொடர்ச்சியாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நமது மாநகரத்தை அழகாகவும், சுகாதாரமாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்க வேண்டியது அனைவரின் பொறுப்பாகும். எனவே, மாநகராட்சி மேற்கொள்ளும் இதுபோன்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா கேட்டுக்கொண்டுள்ளார்.

