தமிழ்நாடு பசுமை இயக்கம் - நகர பசுமையாக்கல் திட்டத்தின் கீழ், தேசிய ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களைக் கௌரவிக்கும் விதமாக 'குருவனம்' என்ற பெயரில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழாவைத் தூத்துக்குடி மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
தேசிய ஆசிரியர் தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 11 வரை ஒரு வாரம் சிறப்பாக விழா கொண்டாடப்படவுள்ளது. மாநகராட்சியின் 4 மண்டலங்களுக்கு உட்பட்ட பள்ளிகள், கல்லூரிகள், பூங்காக்கள், அரசு அலுவலகங்கள், சாலையோரங்கள், வழிபாட்டுத் தலங்கள், தனியார் நிறுவனங்கள், நீர்நிலைப் பகுதிகள், காலி மனைகள் மற்றும் பொது இடங்களில் 1 லட்சம் மரக்கன்றுகள் நட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களில் நடப்படும் மரக்கன்றுகளுக்குத் தண்ணீர் ஊற்றிப் பராமரிப்பதற்கான தேவையான நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.
தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்கள்:
விழாவில் பங்கேற்க, மரக்கன்றுகள் பெற மற்றும் இடவசதி குறித்த தகவல்களைத் தெரிவிக்க மண்டல வாரியான சுகாதார அலுவலர்களைத் தொடர்பு கொள்ளலாம்:
கிழக்கு மண்டலம்: வீ. அரிகணேசன் - 98425 30292
வடக்கு மண்டலம்: சி. ராஜசேகரன் - 80563 47075
தெற்கு மண்டலம்: ஜி. ஸ்டாலின் பாக்கியநாதன் - 94435 28621
மேற்கு மண்டலம்: சு. ராஜபாண்டியன் - 94436 10511
சிறந்த அமைப்புகளுக்குப் பரிசு
'குருவனம்' பசுமைத் திருவிழாவில் சிறப்பாகச் செயல்படும் கல்வி நிறுவனங்கள், பசுமைப் படைகள், நாட்டு நலப்பணித் திட்டம், சாரணர் இயக்க அணிகள், அரசு அலுவலகங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கங்கள் தேர்வு செய்யப்பட்டுப் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன:
முதல் பரிசு: ₹10,000
இரண்டாம் பரிசு: ₹5,000
மூன்றாம் பரிசு: ₹2,000 மற்றும் 'பசுமை ஆர்வலர்' கேடயம்
மாநகராட்சி ஆணையர் அழைப்பு:
மாணவர்கள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலர்கள், தனியார் நிறுவனங்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கங்கள் இந்தப் பசுமை இயக்கத்தில் ஆர்வத்துடன் பங்கேற்று ஆசிரியர்களைக் கௌரவிக்குமாறும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா கேட்டுக்கொண்டுள்ளார்.

