திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பகுதியில் கடல் நீர் திடீரென 100 அடி தூரம் உள்வாங்கியதால், பாசி படர்ந்த அபாயகரமான பாறைகள் வெளியே தெரிந்தன.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதார பதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் ஒவ்வொரு மாதமும் வழக்கமாக அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்கள், அதற்கு முந்தைய நாள் மற்றும் பிந்தைய நாட்களில் கடல் நீர் உள்வாங்குவது இயல்பான நிகழ்வாகும்.
இன்று காலை திருச்செந்தூர் கடலில் திடீரென சுமார் 100 அடி தூரத்திற்கு நீர் உள்வாங்கியது. நீர் உள்வாங்கியதால் கடலுக்குள் இருக்கும் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தென்பட்டன. இதைக் கண்ட பக்தர்கள் பலர் ஆபத்தை உணராமல், அந்தப் பாறைகள் மீது ஏறி நின்று செல்ஃபி மற்றும் புகைப்படங்கள் எடுத்தனர்.
கடல் உள்வாங்கிய பகுதியிலும், பாறைகள் மீதும் ஆபத்தான முறையில் நின்றிருந்த பக்தர்களுக்குக் காவல்துறையினர் மற்றும் கோவில் கடற்கரைப் பாதுகாப்புப் பணியாளர்கள் உடனடியாக எச்சரிக்கை விடுத்து அப்பகுதியில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றினர்.

