திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழாக் கொடியேற்றத்தை, கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட அழைப்பிதழில் உள்ள விவரங்களின்படியே நடத்த வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்செந்தூர் கோவில் நிர்வாகி முத்துகிருஷ்ணன், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: "திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி மகோற்சவ கொடியேற்றம் வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதி காலை 9.00 மணி முதல் 9.22 மணி வரை நடத்தப்பட வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், கோவில் நிர்வாகம் தற்போது கொடியேற்றத்தை அதிகாலை 5.15 மணி முதல் 5.40 மணி வரை நடத்த முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை மாற்றியதற்கு உரிய காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை. பாரம்பரியமாகப் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்படும் நேரத்திலேயே கோவில் சடங்குகள் நடத்தப்பட்டு வருவதால், தற்போதைய நேர மாற்றம் மத நம்பிக்கைகளுக்கும், பக்தர்களின் உணர்வுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, ஆகஸ்ட் 31-ஆம் தேதி காலை 9.00 மணி முதல் 9.22 மணி வரை மட்டுமே கொடியேற்றத்தை நடத்த உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், திருவிழாவிற்கான அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களின்படியே கொடியேற்ற நிகழ்வுகளை நடத்த வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், இனிவரும் காலங்களில் திருவிழா சார்ந்த விவகாரங்களில் கோவில் வித்யாதாரரின் ஆலோசனைகளைப் பெற வேண்டும் என அறிவுறுத்தி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.