கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை முதலாவதாகக் கட்டாயம் பாட வேண்டும் என்ற தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டதற்குப் பிரபல கவிஞர் வைரமுத்து பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துக்குத் தனித் தீர்மானம் இயற்றிய தமிழ்நாடு அரசையும், அதற்கு ஒருதுளி மறுப்புமின்றி ஒருமனதாக ஆதரவளித்த அனைத்துக் கட்சித் தலைவர்களையும் பரந்துபட்ட தமிழ் உலகம் எழுந்து நின்று மனதாரப் பாராட்டுகிறது என அவர் கூறியுள்ளார்.
தமிழ்த்தாய் வாழ்த்து என்பது வெறும் சொற்கூட்டம் அல்ல என்றும், அது புவியியல், வரலாறு, பெருமிதம் என அனைத்தும் கொண்ட தமிழினத்தின் அடையாளக் குறியீடு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தேசிய கீதத்தின் அளவுக்குத் தமிழ்த்தாய் வாழ்த்தைத் தமிழர்கள் அனைவரும் இன்னும் முழுமையாக மனப்பாடம் செய்யவில்லை என்றும், எனவே பள்ளியிலிருந்தே அது கட்டாய மனப்பாடப் பொருளாக மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் முன்மொழிந்ததைப் போல, இதனை வெறும் தீர்மானமாக மட்டுமின்றிச் சட்டமாகவும் இயற்ற வேண்டும் எனக் குறிப்பிட்ட கவிஞர் வைரமுத்து, "தமிழ்த்தாயே! உன்னைச் செயல் மறந்து மட்டுமல்ல, செயல் புரிந்தும் வாழ்த்துவோம்" எனத் தனது வாழ்த்துச் செய்தியை நிறைவு செய்துள்ளார்.

