காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரைத் திறந்து விடுவதில் என்ன பிரச்சனை உள்ளது என்று கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரைத் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

தமிழ்நாடு அரசு வாதம்: "கர்நாடக அணைகளில் 78 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. விகிதாச்சாரப்படி எங்களுக்குக் கிடைக்க வேண்டிய நீர் கிடைக்கவில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட தண்ணீர் வந்துவிட்டாலும், முந்தைய பற்றாக்குறை நீரை ஈடுசெய்யப் போதிய உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை" என வாதிடப்பட்டது.

கர்நாடக அரசு வாதம்: "காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நாளை நடைபெற உள்ளது. எங்களைப் பொறுத்தவரை நீர் பங்கீட்டில் எந்தப் பிரச்சனையும் இல்லை" எனத் தெரிவிக்கப்பட்டது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவு: வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், "தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து உரிய நீரைத் திறக்க கர்நாடகாவுக்கு என்ன பிரச்சனை?" என வினா எழுப்பினர்.

தற்போதைய சூழல் குறித்து நாளை நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இருதரப்பும் புதிய விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்றும், கூடுதல் கோரிக்கைகள் குறித்து ஆணையத்தில் முறையிடலாம் என்றும் அறிவுறுத்தினர்.

திறக்கப்பட்ட நீர் மற்றும் பெறப்பட்ட நீரின் அளவு குறித்து அறிக்கையாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.