தமிழகத்திற்குத் தினமும் 1 டிஎம்சி நீர் வீதம் மொத்தம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்குக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
வழக்கமாக ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படும் மேட்டூர் அணை, இந்த ஆண்டு இதுநாள் வரையில் திறக்கப்படாததால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் நீர் நிரம்பிய போதிலும் தண்ணீர் திறந்துவிட அம்மாநில அரசு தொடர்ச்சியாக மறுத்து வருகிறது.
ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களில் சேர்த்து மொத்தமாக 88 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறந்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை வெறும் 10 டிஎம்சி தண்ணீரை மட்டுமே திறந்துவிட்டுள்ளது. எனவே, நிலுவையில் உள்ள தண்ணீருடன் சேர்த்து 45 டிஎம்சி நீரைக் உடனடியாகத் திறந்துவிட வேண்டும் எனத் தமிழக அதிகாரிகள் வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனையில், காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை ஏற்று, தமிழகத்திற்குத் தினமும் 1 டிஎம்சி வீதம் 15 நாட்களுக்குத் தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.

