கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் கடற்கரைப் பகுதியில் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள புதிய சுற்றுலா வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு. பிரதாப் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடரில், சுற்றுலாத்துறை அமைச்சர் 2026–2027ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது, கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் கடற்கரைப் பகுதியை மேம்படுத்த ரூ. 5.00 கோடி மதிப்பீட்டில் பல்வேறு சுற்றுலா வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்திருந்தார்.

அவ்அறிவிப்பின் அடிப்படையில், விரிவான திட்ட மதிப்பீடு (DPR) தயாரிப்பது தொடர்பாக ஆட்சியர் இந்த ஆய்வை மேற்கொண்டார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும், அவர்களின் பொழுதுபோக்கு வசதிக்காகவும் கீழ்க்கண்ட உள்கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்:

சிறுவர்களுக்கான நவீன விளையாட்டுப் பூங்கா மற்றும் மூங்கில் வளைவுகளுடன் கூடிய அழகிய குடில்கள்: இரவிலும் மிளிரச் செய்யும் அலங்கார மின்விளக்குகள் மற்றும் நடைபாதை (Walkway) வசதிகள். சுற்றுலாப் பயணிகள் அமர்ந்து ரசிக்க இருக்கை வசதிகள், நவீன கழிப்பறைகள் மற்றும் தூய்மையான குடிநீர் வசதி.

கடற்கரையை எளிதில் சென்றடையத் தரமான அணுகுசாலை, பரந்த வாகன நிறுத்துமிடம் மற்றும் உணவகங்கள் போன்ற பணிகளுக்கான விரிவான திட்ட மதிப்பீட்டை விரைந்து தயாரித்துச் சமர்ப்பிக்குமாறு மாவட்ட சுற்றுலா அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆய்வின் போது மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், கிள்ளியூர் வட்டாட்சியர் ராஜசேகர் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.