உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் டேட்டிங் செயலிகள் மூலம் ஆண்களிடம் பழகி, அந்தரங்கப் படங்களை எடுத்து ரூ. 6 கோடிக்கும் அதிகமாகப் பணம் பறித்த பெண் தொடர்பாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரயாக்ராஜைச் சேர்ந்த பல்லவி சிங் என்பவர், 'டிண்டர்' உள்ளிட்ட டேட்டிங் செயலிகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் பல்வேறு ஆண்களுடன் நட்பு ஏற்படுத்திப் பழகி வந்துள்ளார். பின்னர், அவர்களை நேரில் வரவழைத்து ரகசியமாக அந்தரங்கப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து வைத்துள்ளார். இக்காட்சிகளைக் காட்டி, அவர்களிடம் பெருந்தொகையைப் பணம் தருமாறு மிரட்டியுள்ளார்.

பணம் தர மறுப்பவர்கள் மீது பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை முயற்சி போன்ற பொய் வழக்குகளைக் காவல்துறையில் பதிவு செய்வதாக மிரட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வழக்கு மற்றும் விசாரணைக்குப் பயந்து பல தொழிலதிபர்களும், பணக்காரர்களும் இவரிடம் பெருந்தொகையைக் கொடுத்து ஏமாந்துள்ளனர். பணம் கொடுக்க மறுத்த சிலர் மீது காவல்நிலையத்தில் பொய் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், இவர் பல்வேறு நபர்களிடம் இருந்து ரூ. 6 கோடிக்கும் அதிகமாகப் பணம் பறித்தது வெளிச்சத்திற்கு வந்தது.

இதற்கிடையே, பல்லவி சிங் தனது படுக்கையறையில் மெத்தையின் மீது கட்டுக்கட்டாகப் பணத்தை அடுக்கி வைத்து, அதன் மீது படுத்து உறங்குவது போன்ற புகைப்படம் ஒன்றைச் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். மேலும், கையில் துப்பாக்கியுடன் அவர் இருக்கும் மற்றொரு புகைப்படமும் இணையத்தில் வெளியாகிப் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மோசடிச் சம்பவங்களில் பல்லவி சிங்கிற்கு உதவியாக மேலும் 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் செயல்பட்டது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாகப் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.