தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம், ஆற்றல் மேலாண்மை அமைப்பிற்கான சர்வதேசத் தரச்சான்றிழைப் (ISO 50001:2018) பெற்று இந்தியாவில் இச்சாதனையைப் படைத்த முதல் துறைமுகம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
துறைமுகத்தின் சரக்கு கையாளும் கருவிகள், மின்விளக்குகள், கட்டிடங்கள் மற்றும் குளிர்சாதன அமைப்புகள் ஆகியவற்றில் ஆற்றல் பயன்பாட்டைத் திறம்பட நிர்வகித்ததற்காக இச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 1.04 மெகாவாட் கூரை சூரிய மின் நிலையம், 6 மெகாவாட் தரைத்தள சூரிய மின் நிலையம் மற்றும் 2 மெகாவாட் காற்றாலைத் திட்டங்கள் மூலம் ஆற்றல் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன.
2025–26 நிதியாண்டில் துறைமுகத்தின் மொத்த மின்சாரத் தேவையில் 93.89% புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. Bureau Veritas' அமைப்பால் 'Scope-2 கார்பன் உமிழ்வு இல்லாத முதல் இந்தியப் பெருந்துறைமுகம்' என்றும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இச்சாதனை குறித்துத் துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித் தெரிவிக்கையில், "மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் 'ஹரித் சாகர்' வழிகாட்டுதலின்படி, 2070-க்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடையும் பிரதமரின் இலக்கிற்கு ஏற்ப வ.உ.சி. துறைமுகம் தொடர்ந்து பசுமைத் திட்டங்களை முன்னெடுக்கும்" எனக்கூறினார்.

