வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக மாநில பாஜகவைச் சேர்ந்த விக்னேஷ் ஷிஷிர் என்பவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளதாகவும், இது குறித்து மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மற்றும் அமலாக்கத் துறை (ED) விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. ராகுல் காந்தி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் முன்வைத்த வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவுகள்:

மனுதாரரான கர்நாடகாவின் விக்னேஷ் ஷிஷிர், சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை ஆகிய தரப்பினருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு குறித்த முதல்கட்ட விசாரணை நடைபெறும் வரை, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அனைத்து விசாரணைகளையும் உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும்.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளின் அடிப்படையில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை எந்தவொரு அறிக்கையையும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யக் கூடாது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு ராகுல் காந்திக்கு முக்கிய நிவாரணமாகப் பார்க்கப்படுகிறது.