செயற்கைக்கோள் மற்றும் ராக்கெட்டுகள் தயாரிக்கும் பணியில் இருந்து விலகி, முழுமையான தயாரிப்புப் பணிகளைத் தனியார் அமைப்புகளிடம் ஒப்படைக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தீர்மானித்துள்ளது.

இந்திய விண்வெளித் துறையைத் தனியார் துறைக்குப் பரந்த அளவில் திறந்துவிடும் கொள்கையின் கீழ் இம்மாற்றம் செய்யப்படுகிறது. தயாரிப்புப் பணிகளைத் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிடம் வழங்கிவிட்டு, இஸ்ரோ தனது முழு கவனத்தையும் புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களில் (R&D) செலுத்த முடிவு செய்துள்ளது.

சிறிய செயற்கைக்கோள்களை ஏந்திச் செல்லும் 'எஸ்.எஸ்.எல்.வி' (SSLV) ராக்கெட் தயாரிப்புத் தொழில்நுட்பத்தைத் தனியாருக்கு வழங்குவதன் மூலம் இம்மாற்றம் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து இஸ்ரோவின் நம்பிக்கைக்குரிய 'பி.எஸ்.எல்.வி' (PSLV) மற்றும் பிரம்மாண்டமான 'எல்.வி.எம்3' (LVM3) ஆகிய ராக்கெட்டுகளின் தயாரிப்பும் அடுத்தகட்டமாகத் தனியார் அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

இது குறித்து இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்தின் (IN-SPACe) தலைவர் பவன் கோயங்கா தெரிவித்ததாவது: "இந்திய விண்வெளித் துறையை உலகளவில் விரிவுபடுத்தவும், ராக்கெட் உற்பத்தியை வேகப்படுத்தவும் இதற்கான முதற்கட்டப் பணிகள் ஏற்கனவே வெற்றிகரமாகத் தொடங்கிவிட்டன." என்றார்.