தூத்துக்குடி மீளவிட்டானில் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைக்கப்பட இருக்கும் புதிய டாஸ்மாக் கடையை தவெக அரசு திறந்தால் தீ வைத்து கொளுத்துவோம் என அப்பகுதி பெண்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மீளவிட்டான் பகுதியில் குடியிருப்புகள் மற்றும் தோவலயம் அருகே புதிய டாஸ்மாக் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக அங்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டும் வருகிறது. இந்நிலையில் இந்த புதிய டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள், பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் புதியதாக குடியிருப்பிற்கு மத்தியில் அமைக்க கூடாது என்றும் வேறு பகுதிக்கு கொண்டு செல்லவேண்டும் என்றும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதற்காகவா தவெக விஜய் அரசிற்கு வாக்களித்தோம்? வாக்களித்த மக்களுக்கு இதுதான் பரிசா. இங்குள்ள சிவாநகரில் அமைய இருக்கும் டாஸ்மாக் கடைதய திறக்க அனுமதிக்கமாட்டோம்.

இல்லாத பட்சத்தில் கடுமையான போராட்டங்களில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர். மேலும் அங்கு 50 அடியில் ஒரு தேவாலயமும், 100 அடி தூரத்தில் மற்றொரு தேவாலயமும், அருகே மாற்றுத்திறனாளிகள் இல்லம் மற்றும் கல்வி நிலையமும் உள்ளது. 500 மீட்டர் தொலைவில் தபால் நிலையமும், கூட்டுறவு வங்கியும், ரேசன் கடை, ஆரம்ப பாடசாலை என பொதுமக்கள், மாணவ மாணவியர் அதிகமாக கூடும் இடமாக உள்ளது.

இங்கு டாஸ்மாக் கடை அமைந்தால் பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு என்பதும் பெண் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிவிடும். இது தொடர்பாக முதல்வரின் தனிப்பிரிவு, மாவட்ட கலெக்டர், தாலுகா அலுவலகம் என பல இடங்களுக்கு புகார் தெரிவித்துவிட்டோம். ஆனாலும் இங்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு அதில் டாஸ்மாக் கடை அமைக்கும் பணி தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் இங்கு டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டால் கடும் பாதிப்பு ஏற்படும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இங்கு டாஸ்மாக் கடை அமைக்கும் பணி தொடர்ந்தால் அடுத்த கட்டமாக ஊர் பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட தயாராக இருக்கின்றனர்.

மீறி டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால் சாலைமறியல் போராட்டம் நடத்துவோம் அதையும் மீறி திறந்தால் திறக்கப்படும் கடையை அடித்து நொறுக்குவோம், தீவைத்து கொளுத்துவோம், இதற்கு விஜய் அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பாக இருப்பேன் என்று கூறிய தவெக அரசு இதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், பெண்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.