அமெரிக்காவில் வெளியுறவுத் துறை புதிதாக உருவாக்கிய ‘பிறப்புச் சுற்றுலா தடுப்புப் பணிக்குழு’ நடத்திய ஆய்வின் அடிப்படையில், 600-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தானாகவே குடியுரிமை கிடைக்கும் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ‘பிறப்புச் சுற்றுலாவுக்கு’ எதிராக அமெரிக்க நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாகக் கடந்த ஒரே மாதத்தில் 600-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சம்பவப் பின்னணி:

அமெரிக்காவில் பிறக்கும் வெளிநாட்டினரின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் குடியுரிமைக்குத் தடை விதிக்க அதிபர் டிரம்ப் முயன்ற நிலையில், அதனை அமெரிக்க உச்ச நீதிமன்றம் கடந்த ஜூன் 30 அன்று ரத்து செய்தது.

இதனைத் தொடர்ந்து, குழந்தையைப் பெற்றெடுக்கும் நோக்கத்தோடு மட்டும் அமெரிக்காவிற்கு விசா கோருபவர்களைக் கட்டுப்படுத்த அதிபர் டிரம்ப் 2 புதிய நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.

இதன் தொடர்ச்சியாக, அமெரிக்க வெளியுறவுத் துறை புதிதாக உருவாக்கிய ‘பிறப்புச் சுற்றுலா தடுப்புப் பணிக்குழு’ (Birth Tourism Task Force) நடத்திய ஆய்வின் அடிப்படையில், உலகம் முழுவதிலும் இருந்து 600-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ தனது ‘எக்ஸ்’ வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: "ஒரே மாதத்தில் 600-க்கும் மேற்பட்ட விசாக்களைப் பணிக்குழு ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. அமெரிக்கச் சட்டங்களை ஏமாற்றி, பிறப்புச் சுற்றுலா மூலம் பெரும் லாபம் ஈட்ட சில கும்பல்கள் செயல்படுகின்றன.

போலி ஆவணங்கள் தயாரிப்பது, விசா நடைமுறையை ஏமாற்றப் பயிற்சி அளிப்பது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் இத்தகை மோசடிகளில் இருந்து நாட்டைப் பாதுகாப்போம். அமெரிக்கக் குடியுரிமை என்பது விற்பனைக்குரியது அல்ல." எனத் தெரிவித்தார்.