கயத்தாறு அருகே ஆடு மேய்க்கும் பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்துத் தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள காப்புலிங்கம்பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் சந்தணமாரி (45). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவரது ஆடுகளும், அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளி சண்முகராஜ் என்பவரது ஆடுகளும் ஒரே தொழுவத்தில் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் ஆடுகளைத் தனியாகப் பிரித்து அழைத்துச் செல்லுமாறு சந்தணமாரி கூறியதால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.
கடந்த 15.05.2015 அன்று சந்தணமாரி வழக்கம்போல் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த சண்முகராஜ் அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரமடைந்த சண்முகராஜ், சாதிப் பெயரைச் சொல்லித் திட்டியதுடன், சந்தணமாரியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். இச்சம்பவம் குறித்துக் கயத்தாறு போலீசார் வழக்குப் பதிவு செய்து சண்முகராஜைக் கைது செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை முழுமையாக முடிவடைந்த நிலையில், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் சண்முகராஜுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி வஷித்குமார் தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் அரசு சார்பில் வழக்கறிஞர் மணிகண்ட பிரபு ஆஜரானார்.

