பரந்தூர் 2-வது விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்வதால் புதிய தொழில் நிறுவனங்கள் சென்னைக்கு வரத் தயங்கும் சூழல் ஏற்படும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைச் சோபா மாடல் (Sofa Model) அரசு ரத்து செய்திருப்பதற்கு வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்கிறேன்.
சென்னையில் பெருகி வரும் பயணிகள் எண்ணிக்கை மற்றும் சரக்குப் போக்குவரத்தின் எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு கழக ஆட்சியில் இத்திட்டம் உருவாக்கப்பட்டது. இதற்காக இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் ஆகியவற்றின் அனுமதிகள் பெறப்பட்டன.
நில உரிமையாளர்களுக்குச் சந்தை மதிப்பை விட 3 மடங்கு கூடுதல் இழப்பீடு மற்றும் மறு குடியமர்வுக்கான பணிகளுக்குப் பெருமளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அனைத்துப் பணிகளும் முடிந்த நிலையில் அற்ப அரசியல் காரணங்களுக்காகத் திட்டத்தைக் கைவிடுவது அரசுக்கு பெரும் நிதி இழப்பை உண்டாக்கும்.
இத்திட்டம் நிறுத்தப்படுவதால் சென்னையைச் சுற்றியுள்ள தொழில் நிறுவனங்கள் அண்டை மாநிலங்களுக்கு வெளியேறும் அபாயமும், புதிய முதலீடுகள் சென்னைக்கு வரத் தயங்கும் சூழலும் உருவாகும்.
தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தையும் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு பரந்தூர் விமான நிலையப் பணிகளைத் தொடர்ந்து நடத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

