சுற்றுலா பயணிகளுக்காகக் கரையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த பனிக்கரடியைக் கப்பலின் ஹாரன் ஒலியை எழுப்பிப் பயமுறுத்திய கப்பல் உரிமையாளருக்கு நார்வே அரசு ₹5 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
ஐரோப்பிய நாடான நார்வேவுக்குச் சொந்தமான ஸ்வால்பார்ட் தீவுக்கூட்டக் கடற்கரைப் பகுதி வழியாகச் சமீபத்தில் சுற்றுலாப் பயணிகளுடன் கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, கரையில் பனிக்கரடி ஒன்று ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதைச் சுற்றுலாப் பயணிகள் பார்த்தனர்.
அந்தப் பனிக்கரடி நகர்வதைப் பார்க்க விரும்பியதால், கப்பலின் உரிமையாளர் அடர்ந்த மூடுபனியின் போது எச்சரிக்கைக்காக ஒலிக்கப்படும் 'பாக் ஹாரனை' பலமாக ஒலிக்கச் செய்தார். ஹாரனின் பெருஞ்சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்து திடுக்கிட்டு எழுந்த பனிக்கரடி, பயத்தில் அங்கிருந்து அலறியடித்து ஓடியது. இச்சம்பவம் குறித்து அப்பகுதியின் உள்ளூர் அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.
பனிக்கரடிக்குத் தேவையற்ற முறையில் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக, ஸ்வால்பார்ட் ஆளுநர் லார்ஸ் பவுஸ் சம்பந்தப்பட்ட சுற்றுலாக் கப்பல் உரிமையாளருக்கு ₹5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்த எதிர்பாராத அபராதத் தொகையால் கப்பல் உரிமையாளர் கடும் அதிர்ச்சியடைந்தார்.
ஸ்வால்பார்ட் பகுதியின் 1972-ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின்படி, பனிக்கரடிகளைத் தேவையற்ற முறையில் தொந்தரவு செய்வதும், பயமுறுத்துவதும் அல்லது துரத்துவதும் சட்டப்படி குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

