குற்றாலம் அருகே தடுப்புச்சுவரில் பைக் மோதிய விபத்தில் படுகாயமடைந்த தூத்துக்குடி மாணவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி தாளமுத்து நகர் அன்னை இந்திரா நகரைச் சேர்ந்தவர் இருதய ராஜ். இவரது மகன் மாதேவ் (19). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். மாதேவ் தனது நண்பரான லிவிங்ஸ்டனுடன் நேற்று முன் தினம் (ஆக. 22) தூத்துக்குடியில் இருந்து குற்றாலத்திற்கு பைக்கில் சென்று குளித்துவிட்டு, மீண்டும் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
தென்காசியை அடுத்துள்ள வேட்டைக்காரன்குளம் அருகே நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் பலமாக மோதியது. விபத்தில் பைக் தூக்கி வீசப்பட்டு இருவரும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
அவ்வழியாகச் சென்றவர்கள் அவர்களை மீட்டு நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்குத் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாதேவ், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து குற்றாலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

