பான் மசாலா விளம்பரத்தில் நடித்த பாலிவுட் நடிகர்கள் ஷாருக் கான், அஜய் தேவ்கன் மற்றும் டைகர் ஷெராப் ஆகியோருக்கு மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையம் (FDA) நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், மூவரும் இதுவரை பதிலளிக்கவில்லை.

தடை செய்யப்பட்ட பான் மசாலா மற்றும் புகையிலைப் பொருட்கள் பயன்பாட்டை மறைமுகமாக ஊக்குவிப்பதாகக் குற்றஞ்சாட்டி, மூவருக்கும் எஃப்டிஏ (FDA) கடந்த 11-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது. அதில், "நடிகர்கள் ஷாருக் கான், அஜய் தேவ்கன் மற்றும் டைகர் ஷெராப் ஆகியோர் நடித்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்ட 'விமல் ஏலக்காய்' என்ற வாசகம், 'விமல் பான் மசாலா' நிறுவனத்துடன் தொடர்புடையது.

பான் மசாலா மற்றும் புகையிலைப் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விளம்பரம் மூலம் அதன் பயன்பாடு நுகர்வோரிடம் மறைமுகமாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. விளம்பரத்தில் நடித்த மூன்று நடிகர்களும் அந்த நிறுவனத்தின் விளம்பரத் தூதர்களாகவும் உள்ளதால், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம் 2006-ன் கீழ் அவர்களுக்கு நோட்டீஸ் மூலம் இறுதி எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

அதன்படி, விமல் பான் மசாலா நிறுவனத்துடனான ஒப்பந்தங்களை உடனடியாகத் துண்டித்துக் கொள்வதோடு, சமூக வலைதளங்கள் மற்றும் பிற தளங்களில் அது தொடர்பான விளம்பரங்களை உடனடியாக நீக்க வேண்டும். இந்த விளம்பரங்களில் நடித்தது தொடர்பாக உரிய ஆவணங்களுடன் நடிகர்கள் மூவரும் 15 நாட்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஆணையர் பேட்டி:

இந்நிலையில், மும்பையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மகாராஷ்டிர உணவு, மருந்து நிர்வாக ஆணையர் துகாராம் முண்டே, "எஃப்டிஏவின் நோட்டீஸ்க்கு மூன்று நடிகர்களும் இதுவரை பதிலளிக்கவில்லை. உணவுப் பொருட்கள் தொடர்பாக நாளிதழ், தொலைக்காட்சி அல்லது சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் அனைத்து விளம்பரங்களும் எங்களின் கண்காணிப்பில் உள்ளன. அவற்றில் விதிமீறல் உள்ளதா என ஆய்வு மேற்கொள்கிறோம்.

பரிந்துரைக்கப்பட்ட தரநிலைகள் பின்பற்றப்படாவிட்டால், சம்பந்தப்பட்ட உணவு வர்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எஃப்டிஏ வலைதளம் வாயிலாகப் பொதுமக்களும் புகார்களைப் பதிவு செய்யலாம்” என்றார்.