பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு முன்னாள் பிரதமர் இம்ரான் கானை அவரது மனைவி புஷ்ரா பீபி மற்றும் சகோதரி நொரீன் நியாசி ஆகியோர் சிறையில் நேரில் சந்தித்துப் பேசினர்.

ஊழல் வழக்குகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், கடந்த 2023 ஆகஸ்ட் முதல் ராவல்பிண்டியில் உள்ள 'அடியலா' சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் சிறையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து மரணப் படுக்கையில் இருப்பதாக வதந்திகளும் செய்திகளும் பரவின.

இச்செய்திகளைத் தொடர்ந்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தது: இம்ரான் கானை இஸ்லாமாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும். அவரது குடும்பத்தினர் வாரந்தோறும் சிறையில் அவரை நேரில் சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும். வெளிநாட்டில் உள்ள அவரது மகன்களுடன் தொலைபேசியில் பேச வசதி செய்து தர வேண்டும்.

நீதிமன்ற உத்தரவையடுத்து, 9 மாதங்கள் கழித்து இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபி மற்றும் சகோதரி நொரீன் நியாசி ஆகியோர் அடியலா சிறைக்குச் சென்று அவரைச் சந்தித்தனர். சுமார் 15 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பின் போது, அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்தும், அவர் மீதான வழக்கு சார்ந்த சட்ட விவகாரங்கள் குறித்தும் சகோதரி நொரீன் நியாசி இம்ரான் கானிடம் விரிவாக விவாதித்தார்.