யானை தடுப்பு அகழிப் பணி செய்த ஒப்பந்ததாரரிடம் ரூ. 1 லட்சம் லஞ்சம் பெற்ற சிவகிரி வனச்சரகர் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசாரால் கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து கிராமத்திற்குள், அடிக்கடி காட்டு யானை புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. எனவே, காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்கும் விதமாக, வனத்தையொட்டியுள்ள பகுதிகளில், யானை தடுப்பு அகழி பணி அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்தப் பணியை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரரிடம் சிவகிரி வனச்சரகர் கதிரவன் (51), கமிஷன் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஒப்பந்ததாரர் இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். ஒப்பந்ததாரர் அளித்த புகாரின் அடிப்படையில் பொறிவைத்து காத்திருந்த லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார், வனச்சரகர் கதிரவன் ரூ. 1 லட்சம் லஞ்சப் பணத்தைப் பெற்றபோது அவரை அதிரடியாகக் கைது செய்தனர். இச்சம்பவம் வனத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.