தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதந்தோறும் லட்சக்கணக்கில் வருமானம் தருவதாக ஆசைவார்த்தை கூறி ரூ.5 லட்சம் பண மோசடியில் ஈடுபட்ட இரண்டு இளம்பெண்களை நெல்லை சந்திப்புப் போலீசார் கைது செய்துள்ளனர்.
நெல்லைப் பகுதியில் இயங்கி வந்த ஒரு தனியார் நிறுவனத்தில் ரூ. 5 லட்சம் முதலீடு செய்தால், மாதம் தோறும் லட்சக்கணக்கில் அதிக வருமானம் ஈட்டலாம் எனக்கூறிப் பொதுமக்களிடம் இருந்து பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால், வாக்குறுதி அளித்தபடி வருமானம் தராமலும், முதலீடு செய்த பணத்தைத் திருப்பிக் கொடுக்காமலும் ஏமாற்றியதாகப் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இப்புகாரின் பேரில் நெல்லை சந்திப்புப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பண மோசடியில் ஈடுபட்டது திருநெல்வேலி அருகே உள்ள காரையிருப்புப் பகுதியைச் சேர்ந்த சண்முகலட்சுமி (23) மற்றும் பூரணசெல்வி (30) என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, 2 இளம்பெண்களையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் மேலும் பலரிடம் இதுபோன்று மோசடி செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

