கர்நாடகாவில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் (SIR) கீழ், பெங்களூரு தொகுதியில் இருந்து தனது பெயரும் நீக்கப்பட்டுள்ளதாக நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகச் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் அவர் கூறியிருப்பதாவது: "வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் பெங்களூரு தொகுதியில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ள 65 லட்சம் வாக்காளர்களில் நானும் ஒருவன். இது ஒரு நல்ல நகைச்சுவை. நான் பிறந்து, வளர்ந்தது, பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை முடித்தது, நாடகங்கள் நடித்தது என அனைத்துமே இந்தத் தொகுதியில்தான். சொல்லப்போனால், இதே தொகுதியில் நான் நாடாளுமன்ற உறுப்பினர் (எம்பி) வேட்பாளராகப் போட்டியிட்டவனும் கூட.
விளையாட்டு இப்போது ஆரம்பித்துள்ளது. எனது வாக்காளர் அடையாள அட்டையைத் திரும்பப் பெற என்னென்ன நடைமுறைகளைக் கடக்க வேண்டும், என்னென்ன ஆவணங்களைக் காட்ட வேண்டும் எனப் பார்க்கிறேன். அதிகாரத்தைப் பயன்படுத்தி உங்களுக்கு வாக்களிக்காதவர்களின் வாக்குரிமையை நீங்கள் தடுக்கலாம். ஆனால், உங்களைப் பதவியில் இருந்து இறக்கும் எங்களது ஜனநாயகச் சக்தியைத் தடுக்க முடியுமா?"
கர்நாடகாவில் 5.54 கோடி வாக்காளர்களின் தரவுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுத் தீவிர திருத்தப் பணிகள் முடிவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பெங்களூரு சாந்தி நகர் சட்டமன்றத் தொகுதியில் வாக்காளராக இருக்கும் தனது பெயரை 'நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்' (Permanently Shifted) என்ற பிரிவில் அதிகாரிகள் சேர்த்திருப்பதாகப் பிரகாஷ் ராஜ் சாடியுள்ளார்.

