நாகர்கோவிலில் கல்லூரி மாணவர்களை மது அருந்த அனுமதித்த பார் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேரடியாக ஆய்வு நடத்தி, அதிரடியாக மூட உத்தரவிட்டார்.
நாகர்கோவில் ஒழுகினசேரியில், எம்.எல்.ஏ. அலுவலகம் அருகே இயங்கி வரும் மதுக்கடை பாரில், கல்லூரி மாணவர்கள் சீருடையுடன் மது அருந்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.இதனைத் தொடர்ந்து, நேற்று மதியம் 12:30 மணி அளவில் நாகர்கோவில் எஸ்.பி. ஸ்டாலின், அதிரடிப்படை போலீசாருடன் நேரடியாக அந்தப் பாருக்குள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
சிறுவர்களையும் கல்லூரி மாணவர்களையும் பாருக்குள் ஏன் அனுமதிக்கிறீர்கள் என பார் ஊழியர்களை எஸ்பி கடுமையாகக் கண்டித்தார். பாரில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த அனைவரையும் அதிரடிப்படை போலீசார் உடனடியாக வெளியேற்றினர்.
பாரின் உரிமையாளரை உரிமத்துடன் வருமாறு கூறிய எஸ்பி, பாரை உடனடியாக மூட உத்தரவிட்டார்.சம்பந்தப்பட்ட மதுக்கடை மற்றும் பார் அமைந்துள்ள அவ்வை சண்முகம் சாலை மிக முக்கியமான மெயின் ரோடாகும். இதன் அருகே எம்.எல்.ஏ. அலுவலகம், தீயணைப்புத் துறை அலுவலகம், கலைவாணர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் நாகராஜா கோவில் ஆகியவை அமைந்துள்ளன.
நிரந்தரமாக மூட பொதுமக்கள் கோரிக்கை
பகல் 12 மணிக்கு மேல் இப்பகுதியில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு மதுப் பிரியர்களின் கூட்டம் அதிகமாக இருப்பதாகவும், அடிக்கடி தகராறுகள் நடப்பதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, பொதுமக்களின் நலன் கருதி இந்த மதுக்கடை மற்றும் பாரை நிரந்தரமாக மூட வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

