கன்னியாகுமரி மாவட்டத்தில் 'பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்' திட்டத்தின் கீழ், சிலம்பப் பயிற்சி பெற்ற 50 மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்மு. பிரதாப் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார்.
கன்னியாகுமரி மாவட்ட சமூகநலத்துறை சார்பில், நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் இச்சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் திங்கள்நகர் மற்றும் பூதப்பாண்டி ஆகிய பகுதிகளில் செயல்படும் சமூக நல விடுதிகளில் தங்கிப் பயிலும் 50 பெண் குழந்தைகளுக்கு, பெண் பயிற்றுநரைக் கொண்டு 45 நாட்களுக்கு மாலை வேளையில் (தினமும் 90 நிமிடங்கள்) சிலம்பப் பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது.
விழாவில் பயிற்சி பெற்ற மாணவிகள் தங்களது சிலம்பக் கலைத் திறமைகளைச் செயல்விளக்கமாக வெளிப்படுத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர். விழாவில் மாணவிகளுக்குச் சான்றிதழ்களை வழங்கி மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் பேசியதாவது: "தற்போதைய காலகட்டத்தில் தற்காப்புக் கலைகள் மிகவும் அவசியமான ஒன்றாகும். பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்களின் சுய பாதுகாப்புக்கும், உடல் உறுதிக்கும் சிலம்பம் போன்ற பாரம்பரியத் தற்காப்புக் கலைகளைக் கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும்." என்றார்.
இந்நிகழ்வில் மாவட்ட சமூகநல அலுவலர் காயத்ரி, மாவட்ட கல்வி அலுவலர் ஜெயராஜ் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கல்வி) சாரதா, பள்ளி துணை அலுவலர் பென்னட், எஸ்.எல்.பி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் தெய்வபிரியா, மாவட்ட பெண்கள் அதிகாரமளித்தல் மைய ஒருங்கிணைப்பாளர் எவர்லின் சுபா, மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

