நாகர்கோவில் - கோட்டையம் இடையே இயக்கப்பட்டு வரும் பகல்நேரப் பயணிகள் ரயிலை இருமார்க்கத்திலும் இயக்க வேண்டுமென குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் தென்னக ரயில்வேக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

நாகர்கோவிலிருந்து திருவனந்தபுரம் வழியாக கோட்டையத்திற்கு இயக்கப்படும் இந்த ரயில் (232 கி.மீ.), குறைந்த கட்டணத்தில் கேரளா செல்லும் மக்களுக்குப் பெரிதும் பயனுள்ளதாக உள்ளது. கோட்டையம் சென்றடையும் இந்த ரயில், மறுமார்க்கமாக மீண்டும் நாகர்கோவிலுக்குத் திரும்புவதில்லை. இந்திய ரயில்வேயிலேயே இது போன்ற ஒருமுனை இயக்கம் மிக அரிதான ஒன்றாகும்.

கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு பயணிகள் ரயில்கள் எக்ஸ்பிரஸ் கட்டணத்திற்கு உயர்த்தப்பட்டு, பல நிறுத்தங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நாகர்கோவில் - கோட்டையம் ரயிலை இருமார்க்கத்திலும் இயக்க வேண்டும்.

கோட்டையத்திலிருந்து காலை 8:00 மணிக்குப் புறப்பட்டு, மதியம் 4:00 மணிக்கு நாகர்கோவில் வந்து சேருமாறு கால அட்டவணையை அமைக்கலாம். (நாகர்கோவில் ரயில் நிலைய நடைமேடை 1A-வில் திருவனந்தபுரம் மார்க்கத்து ரயில்களை எளிதாகக் கையாள முடியும்).

திருவாரூர் வரை நீட்டிக்கப் பரிந்துரை:

இரயிலை மேலும் பயனுள்ளதாக்க திருவாரூர் - நாகர்கோவில் - எர்ணாகுளம் வழித்தடத்தில் நீட்டிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

செல்லும் வழித்தடம்: திருநெல்வேலி, விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி.

முன்மொழியப்பட்ட நேரம்:

திருவாரூர் ➔ எர்ணாகுளம்: திருவாரூரில் காலை 5:00 மணிக்கு புறப்பட்டு, மதியம் 1:00 மணிக்கு நாகர்கோவில் வந்து, இரவு 9:30 மணிக்கு எர்ணாகுளம் சென்றடைதல்.

எர்ணாகுளம் ➔ திருவாரூர்: எர்ணாகுளத்திலிருந்து காலை 7:00 மணிக்கு புறப்பட்டு, மதியம் 2:00 மணிக்கு நாகர்கோவில் வந்து, இரவு 10:30 மணிக்குத் திருவாரூர் சென்றடைதல்.

இக்கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.