கன்னியாகுமரி மாவட்டத்தில் முறையான நம்பர் பிளேட் இல்லாமல் இயக்கப்பட்ட 18 வாகனங்களைப் போக்குவரத்து காவல்துறையினர் கண்டறிந்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின்படி, போக்குவரத்து காவல்துறை சார்பாக நகரின் முக்கியப் பகுதிகளில் தீவிர வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகளை முறைப்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்தச் சோதனையின் போது, மோட்டார் வாகனச் சட்ட விதிகளின்படி சரியாக நம்பர் பிளேட் பொருத்தாமல் இயக்கப்பட்ட 18 வாகனங்களைப் போக்குவரத்துப் போலீஸார் கண்டறிந்தனர்.

விதிமுறைகளை மீறித் தெளிவற்ற மற்றும் முறையற்ற எண் பலகைகளுடன் இயங்கிய 18 வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த வாகனங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு, சம்பவ இடத்திலேயே புதிய மற்றும் சரியான விதிமுறைப்படியிலான நம்பர் பிளேட்டுகளைப் பொருத்துமாறு உத்தரவிடப்பட்டது.

வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களின் எண் பலகைகளைச் சரி செய்த பின்னரே, காவல்துறையினர் அந்த வாகனங்களை அங்கிருந்து செல்ல அனுமதித்தனர். பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அனைவரும் தங்களது வாகனங்களில் அரசு விதித்துள்ள விதிமுறைகளின்படி தெளிவான எண் பலகைகளைப் பொருத்த வேண்டும் என்றும், போக்குவரத்து விதிகளுக்குக் கீழ்ப்படிந்து காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.