பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான்கான் இறந்துவிட்டதாக வெளியாகிய வதந்தி தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், கடந்த 2023 ஆகஸ்ட் முதல் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் 'எமி' விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட பாகிஸ்தான் பத்திரிகையாளர் வஜாஹத் சயீத் கான் வெளியிட்ட தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகத்தின் மூன்று மூத்த அதிகாரிகள், இம்ரான்கான் உயிருடன் இல்லாமல் இருக்கலாம் என்று அஞ்சுவதாகத் தன்னிடம் தெரிவித்ததாக வஜாஹத் சயீத் கூறியிருந்தார்.
இதனால் பாகிஸ்தானில் கடும் பதற்றம் நிலவியது. இதைத் தொடர்ந்து, பத்திரிகையாளர் வஜாஹத் சயீத் கான் தனது கருத்தை மாற்றிக்கொண்டு தெளிவுபடுத்தியுள்ளார். யூடியூப் வீடியோவில் அவர் கூறியதாவது: ராணுவ தலைமையகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் அளித்த தகவல் என்பது உறுதிப்படுத்தப்பட்ட உளவுத் தகவல் அல்ல.
மாறாக, அது அவர்களின் தனிப்பட்ட மதிப்பீடு மற்றும் அச்சங்கள் மட்டுமே ஆகும். இம்ரான்கான் இறந்ததற்கான எந்தவொரு ஆதாரத்தையும் அந்த அதிகாரிகள் யாரும் நேரில் பார்க்கவில்லை; அவை வெறும் சந்தேகங்கள் மட்டுமே எனக் கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

