முல்லைப் பெரியாற்றில் புதிய அணையைக் கட்டுவதற்கான இடத்தை தமிழக அரசே தீர்மானிக்கட்டும் என கேரள முதல்வர் வி.டி. சதீசன் கூறியுள்ளார்.
சென்னை அருகே கோவளத்தில் இன்று (ஆக. 20) நடைபெற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான 31-ஆவது தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய், கேரள முதல்வர் வி.டி. சதீசன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் முக்கியப் பிரச்சினைகள், மாநிலங்களுக்கு இடையேயான கூட்டுறவுகள், தேவைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மாநாட்டில் பங்கேற்ற கேரள முதல்வர் வி.டி. சதீசன், கேரளத்தின் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தினார். மேலும், முல்லைப் பெரியாற்றில் கட்டப்படும் புதிய அணையில் இருந்து தமிழகத்திற்கான நீர்ப் பகிர்வு முழுவதுமாக வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: "முல்லைப் பெரியாற்றில் கட்டப்படும் புதிய அணையின் வடிவம், அமைவிடம் மற்றும் கட்டுமானப் பணிகளைத் தமிழக அரசே மேற்கொள்ளட்டும். அதற்கான முழுமையான செலவைக் கேரள அரசு ஏற்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, முல்லைப் பெரியாறு அணையானது பாதுகாப்பற்ற முறையில் இருப்பதாகவும், இதனால் முல்லைப் பெரியாற்றில் புதிய அணையைக் கட்ட வேண்டுமெனவும் கேரள அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ஆனால், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பான முறையில் செயல்பட்டு வருவதாகத் தமிழக அரசு உறுதியளித்து வருகிறது. மேலும், கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையை நிர்வாகம் செய்வதற்குத் தமிழக அரசு குத்தகை மூலம் 999 ஆண்டுகளுக்கு உரிமை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

