மேல கடையநல்லூர் அருகே நள்ளிரவில் மூதாட்டியைக் கட்டிப்போட்டு 44 கிராம் தங்க நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில், பக்கத்து வீட்டுப் பெண் உட்பட இருவரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் மேல கடையநல்லூரைச் சேர்ந்த மூதாட்டி கணபதி அம்மாள் (73) என்பவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். கடந்த 11-ஆம் தேதி நள்ளிரவு வீட்டின் ஓட்டைப் பிரித்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், மூதாட்டியைக் கட்டிப்போட்டுக் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர். உயிருக்குப் பயந்த அவர், தனது காதில் இருந்த கம்மல் மற்றும் கழுத்தில் இருந்த 44 கிராம் தங்க நகைகளைக் கழற்றிக் கொடுத்துள்ளார்.
இதுகுறித்துக் கடையநல்லூர் காவல் ஆய்வாளர் கிறிஸ்டி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். சம்பவ இடத்திற்கு அருகே உள்ள தோப்பில் சந்தேகத்திற்கிடமாக நீண்ட நேரமாகக் கரைகடந்து நின்ற 'ஆரஞ்சு' நிற பைக்கின் பதிவு எண்ணைக் கைப்பற்றிப் போலிஸார் ஆய்வு செய்தனர்.
அவ்வகையில், பைக்கின் உரிமையாளர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கோகுல் கண்ணன் (36) என்பது தெரியவந்தது. அவரது செல்போன் சிக்னலை வைத்துச் சென்னையில் வைத்து அவரைத் தனிப்படை போலிஸார் மடக்கிப் பிடித்தனர்.
கோகுல் கண்ணனிடம் நடத்திய விசாரணையில், மூதாட்டியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் வேலம்மாள் (48) மற்றும் அவரது ஆண் நண்பர் சுரேஷ் ஆகியோருடன் இணைந்து இக்கொள்ளைச் சம்பவத்தைத் திட்டமிட்டதும், இதற்காகத் தனது பைக்கை கோகுல் கண்ணன் கொடுத்ததும் அம்பலமானது.
இதையடுத்து வேலம்மாள் மற்றும் கோகுல் கண்ணன் ஆகிய இருவரையும் போலிஸார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 44 கிராம் நகைகளை மீட்டு மூதாட்டியிடம் ஒப்படைத்தனர். தலைமறைவாக உள்ள சுரேஷ் என்பவரைப் போலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

