போர்க் குற்றங்கள் மற்றும் மனிதநேயத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளில் சிரியாவின் முன்னாள் அதிபர் பஷார் அல் ஆசாத்திற்கு அந்நாட்டின் சிவில் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

சிரியாவில் கடந்த 54 ஆண்டுகளாக ஆசாத் குடும்பத்தினரின் ஆட்சி நடைபெற்று வந்தது. 2000-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரை பஷார் அல் ஆசாத் சிரியாவின் அதிபராகப் பொறுப்பு வகித்தார். தனது ஆட்சிக் காலத்தில் எதிர்ப்பாளர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கியதுடன், முழு அதிகாரத்தையும் தன் வசமே வைத்திருந்தார்.

கடந்த 2011-இல் தொடங்கிய உள்நாட்டுப் போர் 2024-இல் தீவிரமடைந்தது. கிளர்ச்சிப் படைகள் தலைநகர் டமாஸ்கஸைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, பஷார் அல் ஆசாத் தனது குடும்பத்துடன் ரஷ்யாவிற்குத் தப்பியோடினார். அதனைத் தொடர்ந்து அகமது அல் ஷாரா புதிய அதிபராகப் பதவியேற்றார்.

உள்நாட்டுப் போரின் போது லட்சக்கணக்கான மக்களைக் கொன்றதாக பஷார் அல் ஆசாத் மீது போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல் வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த சிரியா சிவில் நீதிமன்றம், முன்னாள் அதிபர் பஷார் அல் ஆசாத் மற்றும் சிரிய ராணுவத்தில் பணியாற்றிய அவரது சகோதரர் மஹர் அல் ஆசாத் ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதித்தது.

மேலும், ஆசாத் ஆட்சியின் போது டாரா மாகாண அரசியல் பாதுகாப்புப் பிரிவின் தலைவராக இருந்த அவரது உறவினர் அடேப் நஜிப்பிற்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளைக் கொன்றது மற்றும் சித்திரவதை செய்த குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டுள்ளார்.