மண்டைக்காடு பகுதியில் அமைந்துள்ள நீர்நிலைகளை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், இன்று (13.08.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் தெரிவிக்கையில் "கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் தூர்வாரி, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு, போதிய நிதியாதாரம் பெறப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.அதன்ஒருபகுதியாக, கேரளா எல்லையிலிருந்து குளச்சல் வரை செல்லக்கூடிய வரலாற்றுச் சிறப்புமிக்க பழமையான ஏவிஎம் கால்வாயைத் தூர்வாருவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக புதூர் மற்றும் மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவில் அருகில் அமைந்துள்ள நீர்நிலைகள் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நீர்நிலைகளை முழுமையாகத் தூர்வாருவதற்குத் தேவையான திட்ட வரைவை உடனடியாகத் தயார் செய்து, பணிகளை விரைவில் தொடங்குமாறு நீர்வளத்துறை செயற்பொறியாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் அருள்மிகு மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள், கடலில் நீராடிவிட்டு அல்லது கால்நனைத்துவிட்டு வந்து கோவிலுக்குச் செல்வதற்கு வசதியாக, கோவில் அருகில் உள்ள குளத்தினை உடனடியாகச் தூர்வாரி சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்று தெரிவித்தார்.

ஆய்வில் நீர்வளத்துறை செயற்பொறியாளர் வசந்தி, கல்குளம் வட்டாட்சியர் ராஜேஷ், உதவி செயற்பொறியாளர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.