"மக்களுக்கான தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் ஒருபோதும் ஊழலுக்கு இடமில்லை" என்று நெல்லையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சமூகநலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசினார்.

நெல்லை வடக்கு மாவட்ட த.வெ.க. தொண்டர் அணி மற்றும் வர்த்தகர் அணி சார்பில், 'போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும்' என்பதை வலியுறுத்திப் பாளையங்கோட்டையில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. அண்ணா விளையாட்டு மைதானம் முன்பாக தொடங்கிய இப்போட்டிக்கு மத்திய மாவட்ட செயலாளர் மரிய ஜான் தலைமை தாங்கினார்.

அமைச்சர்கள் ஜெகதீஸ்வரி மற்றும் மதன்ராஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டு மாரத்தான் போட்டியைத் தொடங்கி வைத்தனர். அண்ணா விளையாட்டு மைதானத்தில் தொடங்கிய இப்போட்டி, ஐகிரவுண்டு அரசு மருத்துவமனை, டி.ஐ.ஜி. அலுவலகம், பல்நோக்கு அரசு மருத்துவமனை வழியாகச் சென்று சீனிவாசநகர் வரை சென்று மீண்டும் அண்ணா மைதானத்தை வந்தடைந்தது. இதில் திரளான பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் மற்றும் கோப்பைகளை வழங்கிச் சமூகநலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசியதாவது: "கடந்த ஆட்சியில் அனைத்துத் துறைகளும் ஊழலில் ஊறிக் கிடந்தன. ஆனால், தமிழக வெற்றிக் கழக ஆட்சி எப்போதுமே ஊழல் இல்லாத ஆட்சியாகவே தொடரும். இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

முன்பு அரசு அலுவலகங்களுக்குச் சென்றால் மரியாதை இல்லாமல் நடத்தினார்கள். இன்று அந்த நிலை மாறி, 'வாருங்கள், உட்காருங்கள்' என அதிகாரிகள் பேசும் அளவிற்கு மிகப்பெரிய மாற்றம் வந்துவிட்டது. இதுவே மக்களுக்கான மாற்றம். த.வெ.க. ஆட்சி என்பது முழுக்க முழுக்க மக்களுக்கான ஆட்சி" என்றார்.

துணை பொதுச்செயலாளர்கள் ராஜகோபால், ஜாகீர் உசேன் மற்றும் சதீஷ் கிறிஸ்டோபர் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். இப்போட்டிக்கான ஏற்பாடுகளை வர்த்தகர் அணி மாவட்ட இணை அமைப்பாளர்கள் ராமநாதன், அருண் இளங்கோ, தொண்டர் அணி அமைப்பாளர் பிரதீப் மற்றும் இணை அமைப்பாளர் அப்துல் பாசித் ஆகியோர் செய்திருந்தனர்.