மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 55-ஆம் ஆண்டு ஆடிப்பூர பெருவிழாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 55-ஆம் ஆண்டு ஆடிப்பூர பெருவிழா கடந்த 13-ஆம் தேதி காலை மங்கல இசையுடன் விழா தொடங்கியது. விடியற்காலை 3:00 மணி அளவில் குருபீடத்தில் உள்ள பங்காரு சித்தரின் திருவுருவச் சிலைக்கும், ஆதிபராசக்தி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன.
ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், பங்காரு சித்தரின் திருப்பாதுகைகளுக்குப் பாதபூஜை செய்தார். தொடர்ந்து மாலையில் கலச விளக்கு மற்றும் வேள்வி பூஜைகள் வெகுவிமரிசையாக நடைபெற்றன.
ஆடிப்பூர விழாவின் முக்கிய நிகழ்வான சுயம்பு அன்னைக்கு பால் அபிஷேகம் செய்யும் நிகழ்வை ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், துணைத் தலைவர்கள் கோ.ப. அன்பழகன், கோ.ப. செந்தில்குமார், ஸ்ரீதேவி ரமேஷ், உமாதேவி ஜெய்கணேஷ் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி அகத்தியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து 2 லட்சத்திற்கும் மேற்பட்ட செவ்வாடை பக்தர்கள் கஞ்சி கலயங்களைத் தலையில் சுமந்தபடி சித்தர் பீடத்தைச் சுற்றி வலம் வந்து, சுயம்பு அம்மனுக்குப் பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.இந்தப் பாலபிஷேக நிகழ்வு இன்று மாலை வரை கோலாகலமாக நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் ஆதிபராசக்தி மருத்துவமனை இயக்குனர் ரமேஷ், லட்சுமி பங்காரு கலைக் கல்லூரி தாளாளர் ஆஷா அன்பழகன், செவிலியர் கல்லூரி தாளாளர் ஸ்ரீலேகா செந்தில்குமார், டாக்டர் மதுமலர் மற்றும் தென்னக ரயில்வே ஓய்வுபெற்ற பொது மேலாளர் ஜெயந்த் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

விழாவிற்கான அனைத்துச் சிறப்பு ஏற்பாடுகளையும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் கோவை மாவட்டப் பொருளாளர் மணி மற்றும் திருப்பூர் மாவட்டச் செயல்தலைவர் நடராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.

