திருநெல்வேலியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.4.81 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனந்த் மோகன் வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (28.08.2026) மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன்தலைமையில் நடைபெற்றது.

இச்சிறப்பு முகாமில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டார்கள். அவர்கள் அனைவரையும் அமர வைத்து, அவர்களின் கோரிக்கை மனுக்களை இருப்பிடத்திற்கே சென்று சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டு, மனுக்களை பெற்றுக் கொண்டார்கள். துறைசார்ந்த அலுவலர்கள் இம்மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி விரைந்து தீர்வு காண்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் பயின்று வரும் 13 சிறப்பு குழந்தைகளுக்கு தலா ரூ.9 ஆயிரம் மதிப்பில் கமோடு நாற்காலிகளும், 12 சிறப்பு குழந்தைகளுக்கு தலா ரூ.9500 மதிப்பில் CP நாற்காலிகளும், நலவாரிய திட்டத்தின் கீழ் விபத்தில் இறந்தவர் வாரிசுதாரர் நிவாரண தொகையாக ரூ.2 இலட்சம், விபத்து நிவாரணத்தொகையாக ரூ.50 ஆயிரம் என மொத்தம் ரூ.4.81 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்கள்.

இக்கூட்டத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ் உட்பட துறைசார்ந்த அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டார்கள்.