சுதந்திர தினம் மற்றும் வார விடுமுறை எனத் தொடர்ந்து 2 நாட்கள் விடுமுறை கிடைத்ததை அடுத்து, குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் பெருந்திரளாகக் குவிந்து அருவிகளில் உற்சாகமாகக் குளித்து மகிழ்ந்தனர்.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாகக் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து சிறப்பாக உள்ளது: மெயின் அருவியில், மனதை மயக்கும் வகையில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. ஐந்தருவி ஐந்து கிளைகளிலும் தண்ணீர் சீராக விழுந்து வருகிறது. பழைய குற்றாலம், புலி அருவியில் மிதமான அளவில் தண்ணீர் விழுகிறது.
தொடர் விடுமுறையை முன்னிட்டு வெளியூர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் குற்றாலத்திற்கு வருகை தந்தனர். மெயின் அருவி, ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலத்தில் கூட்டம் அலைமோதியதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்கப் பயணிகள் வரிசையில் நின்று குளிக்குமாறு காவல் துறையினர் அறிவுறுத்தித் தீவிரமாகக் கண்காணித்தனர்.
நேற்று காலையில் மிதமான வெயில் அடித்த போதிலும், மாலையில் குளிர்ந்த தென்றல் காற்று வீசியதால் குற்றாலத்தில் இதமான சூழல் நிலவியது. இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரித்துக் காணப்படுகிறது.

