தடை செய்யப்பட்ட குரங்கு குட்டியுடன் நடிகர் விக்ரம் வீடியோ வெளியிட்டு சர்ச்சையான நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள மு.க. முத்துவின் வீட்டில் வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

நடிகர் விக்ரம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்தோனேசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட 'லார் கிப்பன்' (Lar Gibbon) ரகக் குரங்கு குட்டியுடன் விளையாடும் வீடியோவை பதிவிட்டிருந்தார். இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்திருத்தத்தின்படி, சர்வதேச அளவில் பாதுகாக்கப்பட்ட வெளிநாட்டு விலங்கினங்களை வாங்குவதும், விற்பதும், வீடுகளில் வளர்ப்பதும் சட்டவிரோதமாகும்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, விக்ரம் தனது சமூக வலைதளப் பக்கத்திலிருந்து அந்த வீடியோவை நீக்கினார். தகவலறிந்த வனத்துறை அதிகாரிகள், அந்த குரங்கு விக்ரமுக்கு எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணையைத் தொடங்கினர்.

விக்ரம் தனது மகள் வீட்டில் வைத்து அந்த வீடியோவை எடுத்ததாகத் தெரியவந்ததை அடுத்து, நீலாங்கரையில் உள்ள அவரது மகள் வீட்டிற்கு வனத்துறையினர் சென்று விசாரணை மேற்கொண்டனர். (நடிகர் விக்ரமின் மகள், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்துவின் பேரனுக்கு மனைவியாவார்).

விசாரணையில், விக்ரம் தனது மகளைப் பார்க்க வந்த இடத்தில், விற்பனைக்காக யாரோ கொண்டு வந்திருந்த குரங்கை எடுத்துக் கொஞ்சி வீடியோவாகப் பதிவிட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, தடை செய்யப்பட்ட அந்தக் குரங்கை விற்பனை செய்ய முயன்ற நபரிடம் உரிய ஆவணங்கள் உள்ளதா என்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.