கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.1041 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை முன்னேற்ற பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் ஆய்வு மேற்கொண்டார்.

தேசிய நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை நடைபெற்று வரும் நான்குவழிச்சாலை பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- கேரளா தமிழ்நாடு எல்லையான களியக்காவிளை முதல் கன்னியாகுமரி வரையிலான என்.எச் 47 நான்கு வழிச்சாலையில் கூடுதல் கட்டுமான பணிகள் ரூ.1041.3 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக ரயில்வே மேம்பாலம், வடிகால் பணிகள், சுங்கசாவடி, பெட்டி வடிவக்குழாய் பாலப்பணி (Box Culverts), பெட்டி வடிவக்குழாய் பாலங்கள் அகலப்படுத்தும் பணி, சிறிய பாலங்கள், பெரிய பாலங்கள், வாகனங்கள் செல்வதற்கான சுரங்கப்பாதை பணிகள், வாகனங்களுக்கான மேம்பாலங்கள், பாதசாரிகளுக்கான மேம்பாலங்கள், பேருந்து நிறுத்தங்கள், நிழற்கூடைகள், சரக்கு வாகனங்கள் நிறுத்துமிடம், சேவைச்சாலைகளை அகப்படுத்துதல் என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இன்று குளப்புறம், விளாத்துறை, வாழ்வச்சக்கோஷ்டம், ஆத்திவிளை, தோட்டியோடு, புத்தேரி, வழுக்கம்பாறை, காப்புக்காடு, குன்னத்தூர், இரணியல் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வரும் பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக அணுகுசாலை அமைக்கும் பணி, பால கட்டுமான பணி, சாலை மேம்பாலம் அமைக்கும் பணி, இரயில்வே மேம்பாலம், கேபியன் சுவர் அமைக்கும் பணி ஆகியவற்றின் உறுதித்தன்மை, மழைநீர் தேங்காமல் இருப்பதற்கான வடிகால் வசதிகள் மற்றும் பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பங்கள் குறித்து நேரில் பார்வையிட்டு துறை அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது.

நெடுஞ்சாலை பணிகளுக்கு தேவையான ஜல்லி, மணல், சிமெண்ட் உள்ளிட்ட பொருட்கள் அனைத்து தடையின்றி கிடைப்பதை துறை சார்ந்த அலுவலர்கள் உறுதிசெய்ய வேண்டும். நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும் வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் தெரிவித்தார். ஆய்வுகளில் தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குநர் சச்சின் குமார், திட்ட பொறியாளர் சிவா, மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.