கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய புதிய சுற்றுலா வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் கூட்டரங்கில் சுற்றுலா மேம்பாட்டுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், கலந்துகொண்டு துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய புதிய சுற்றுலா வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் தற்போது நடைபெற்று வரும் சுற்றுலா வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

குறிப்பாக குளச்சல், தேங்காய்ப்பட்டணம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் வருகை தரும் அளவிற்கு சுற்றுலா வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ள வேண்டுமென துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் பேச்சிப்பாறை அணை பகுதியில் பூங்கா அமைத்து அடிப்படை வசதிகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்த வேண்டும்.

மேலும், கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலா மேம்பாட்டுக் குழுவினை பதிவுத்துறையில் பதிவு செய்தல் தொடர்பாகவும், இந்திய அரசின் பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் சுற்றுலாத் தொழில் துறையில் பணிபுரியும் அமைப்புசாரா தொழிலாளர்களை பதிவு செய்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மற்றும் சங்குத்துறை கடற்கரைகளில் ஆகஸ்ட் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள காத்தாடி திருவிழாவிற்கான (Kite Festival) முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கியமான சுற்றுலாத்தலங்களில் சுற்றுலா தகவல் பலகைகள் அமைக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

ஆய்வுக் கூட்டத்தில், உதவி ஆட்சியர் (பயிற்சி) ர.மோனிகா, மாவட்ட சுற்றுலா அலுவலர்கள் காமராஜ், நெடுஞ்சாலைத்துறை கோட்ட செயற்பொறியாளர் சத்தியமுர்த்தி, துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.