கேரளா வழியாக நாகர்கோவிலில் இருந்து பெங்களூருக்குப் படுக்கை வசதி கொண்ட (Sleeper) வந்தே பாரத் விரைவு ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளதற்கு, கன்னியாகுமரி மாவட்டப் பயணிகள் சங்கம் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து உள்ளது.
தற்போதைய திட்டப்படி இர்ரயில் தமிழ்நாட்டிற்குள் வெறும் 40 கி.மீ மட்டுமே பயணித்து, கேரளாவுக்குள் நுழைந்து திருவனந்தபுரம், எர்ணாகுளம், பாலக்காடு வழியாக 400 கி.மீ-க்கும் அதிகமாகச் சுற்றி மீண்டும் தமிழ்நாட்டிற்குள் நுழைந்து பெங்களூரை அடைகிறது.
பராமரிப்பு மையச் சிக்கல் (Maintenance Depots): இந்த ரயிலை நாகர்கோவிலில் பிட்லைன் பராமரிப்பு செய்து இயக்கினால், வருங்காலத்தில் வரவிருக்கும் சென்னை – கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் – பெங்களூரு (மதுரை வழியே) படுக்கை வசதி வந்தே பாரத் ரயில்களுக்குப் பராமரிப்பு வசதி இல்லை எனக் கூறி, அவை திருநெல்வேலியோடு நிறுத்தப்படும் அபாயம் உள்ளது.
நேரடி வழி vs கேரளா சுற்ற வழி - கட்டண ஒப்பீடு:
திருநெல்வேலி, மதுரை வழியாக இயக்கப்படும் நேரடி வழியானது 661 கி.மீ மட்டுமே தூரம் கொண்டதாகும். ஆனால் கேரளா வழியிலான சுற்ற வழி 913 கி.மீ தூரம் கொண்டது.
வகுப்பு (Class) கேரளா சுற்ற வழி கட்டணம் மதுரை வழி நேரடிக் கட்டணம் பயணிகள் சேமிப்பு
3 Tier AC ₹ 2,335 ₹ 1,690 ₹ 645
2 Tier AC ₹ 3,015 ₹ 2,180 ₹ 835
1st AC ₹ 3,615 ₹ 2,675 ₹ 940
பயணிகள் சங்கத்தின் மாற்றுப் பரிந்துரைகள்:
1. மங்களூரு எக்ஸ்பிரஸ் நீட்டிப்பு: திருவனந்தபுரம் – மங்களூரு எக்ஸ்பிரஸ் (16347/16348) ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும்.
2. திருவனந்தபுரத்தில் பராமரிப்பு: இதன்மூலம் திருவனந்தபுரம் சென்ட்ரலில் காலியாகும் நடைமேடையைப் பயன்படுத்தி, பெங்களூருக்கான Sleeper வந்தே பாரத் ரயிலைத் திருவனந்தபுரம் – பெங்களூரு ரயிலாக அங்கிருந்தே இயக்கலாம்.
கன்னியாகுமரி மாவட்டப் பகுதிகளை மீண்டும் மதுரைக் கோட்டத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், மக்கள் பிரதிநிதிகள் (MP/MLA) இதில் உடனடியாகத் தலையிட வேண்டும். குமரி மக்களின் கோரிக்கையை மீறி கேரளா வழியே ரயில் இயக்கப்பட்டால், தெற்கு ரயில்வேக்கு எதிராகப் பலகட்ட ஜனநாயகப் போராட்டங்கள் வெடிக்கும் எனப் பயணிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி. எட்வர்ட் ஜெனி எச்சரித்துள்ளார்.

