தக்கலை அருகே கனிமவளங்களை ஏற்றி வந்த 5 கனரக லாரிகளைத் திருவிதாங்கோடு பகுதி பொதுமக்கள் நள்ளிரவில் மடக்கிப் பிடித்துக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிமவளக் கடத்தலைத் தடுக்கும் பொருட்டு, நேற்று தக்கலையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதனால், பிரதான சாலையைத் தவிர்த்து கனிமவளக் கடத்தல் கும்பல் மாற்றுப்பாதையில் லாரிகளை இயக்கியதாகக் கூறப்படுகிறது.

தோட்டியோடு, ஆழ்வார்கோயில் வழியாகத் திருவிதாங்கோடு பகுதிக்குள் லாரிகள் நுழைந்துள்ளன. கனிமவளங்களை ஏற்றி வந்த லாரிகளைப் பார்த்த திருவிதாங்கோடு பகுதி பொதுமக்கள், இரவு 8 மணி அளவில் 3 லாரிகளையும், இரவு 10 மணிக்கு மேல் மேலும் 2 லாரிகளையும் அதிரடியாக வழிமறித்துச் சிறைபிடித்தனர்.

பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், 5 கனரக லாரிகளையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் லாரிகளைச் சிறைபிடித்த இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பிரதான சாலைகளில் மட்டும் சோதனைகளைச் சுருக்காமல், கனிமவளக் கடத்தலைத் தடுக்க கிராமப்புற மாற்றுப்பாதைகளிலும் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.