கடல் சீற்றம் அதிகமாக காணப்படுவதால் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட கடலோர மீனவ மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் அறிவுறுத்தியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை மற்றும் கரையோரப் பகுதிகளில், குறிப்பாக தாழ்வான பகுதிகளில் அவ்வப்போது அலைகள் சீற்றத்துடன் எழும்பி கடல் நீர் கரையை நோக்கி வேகமாகப் புகும் நிலை ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மீனவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடல் சீற்றம் மற்றும் உயர் அலைகள் எழும் அபாயத்தைக் குறிக்கும் கள்ளக்கடல் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடலுக்கு அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஆபத்தான கடற்கரைப் பகுதிகளில் உள்ள நுழைவாயில்கள் மூடப்பட்டு காவல்துறை பாதுகாப்பு தீவிரப்படுத்தப்படுகிறது. சிறிய படகுகளை கரையோரப் பகுதிகளில் இயக்கக்கூடாது. படகுகள் ஒன்றோடொன்று மோதுவதையும் சேதமடைவதையும் தவிர்க்கும் வகையில் போதிய இடைவெளியில் பாதுகாப்பாக நிறுத்தப்பட வேண்டும்.

கடற்கரை மற்றும் கரையோரப் பகுதிகளில் படகு இயக்கம் நிறுத்தப்பட வேண்டும். கடலில் திடீரென பலத்த காற்று வீசுவதோடு கடலோரப்பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்பட வாய்ப்புள்ளது. எனவே கன்னியாகுமரி முதல் நீரொடி வரையிலான பகுதிகளில் வசிக்கும் மீனவர்களும், அனைத்து கடலோரப்பகுதிகளில் வசிக்கும் மக்களும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் மீனவர்கள் கடற்கரைப் பகுதிக்கு செல்வதையும், கடலில் குளிப்பதையும் முற்றிலும் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.