ஸ்காட்லாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த கோவில்பட்டி வீரர் ராஜா முத்துப்பாண்டி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் நேரில் வாழ்த்து பெற்றார்.
ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் கடந்த 26.07.2026 அன்று காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்றன. இதில் பளுதூக்குதல் 65 கிலோ எடைப் பிரிவில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். இப்போட்டியில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 3 பேர் மட்டுமே பதக்கம் வென்ற நிலையில், அதில் ராஜா முத்துப்பாண்டியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளிப் பதக்கம் வென்று தூத்துக்குடி மாவட்டத்திற்கும், தமிழகத்திற்கும் மற்றும் இந்திய நாட்டிற்கும் பெருமை சேர்த்த ராஜா முத்துப்பாண்டி, இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மகாஜன் நேரில் சந்தித்தார். தான் வென்ற வெள்ளிப் பதக்கத்தைக் காண்பித்து, ஆட்சியரிடம் வாழ்த்துக்களைப் பெற்றார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மூ.குருச்சந்திரன், உதவி ஆட்சியர் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரத்தினராஜ் ஆகியோர் உள்ளனர்.

