தமிழ்நாட்டின் பொருளாதாரத்தைச் சீரமைத்துச் சிறந்த முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் செயல்பட்டுள்ளார் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜீத் திப்கே தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் நடத்தப்பட்ட தொடர் போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தப் போராட்டத்தின் தீவிரத்தால் மத்திய அரசு இறங்கி வந்ததைத் தொடர்ந்து, கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். அந்தப் போராட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் பல்வேறு மக்கள் சார்ந்த அரசியல் செயல்பாடுகளில் களமிறங்கி வருகின்றனர்.
சிறந்த முதலமைச்சர்கள் யார்?
இதனிடையே, பிரபல ஊடகம் சார்பில் நடத்தப்பட்ட கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அபிஜீத் திப்கே மற்றும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அப்போது 'இந்தியாவின் சிறந்த முதலமைச்சர்கள் யார்?' என நெறியாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்துப் பேசிய கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே, முன்னாள் முதலமைச்சர்களான மு.க.ஸ்டாலின் (தமிழ்நாடு), பினராயி விஜயன் (கேரளா), அரவிந்த் கெஜ்ரிவால் (டெல்லி) ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டார்.
நிர்வாகத் திறனுக்குப் பாராட்டு:
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நிர்வாகத் திறனைச் சுட்டிக்காட்டிய அபிஜீத் திப்கே, மாநிலத்தின் பொருளாதாரத்தை அவர் மிகச் சிறப்பாக மேம்படுத்தியதாகக் குறிப்பிட்டார்.
அதேபோல, கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனின் ஆட்சிக்காலத்தில் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் வலுவான அடிப்படைக் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகப் பாராட்டினார். டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், அரசுப் பள்ளிகள் மற்றும் மருத்துவக் கட்டமைப்பில் புரட்சிகர மாற்றங்களைக் கொண்டுவந்ததாகக் குறிப்பிட்டார். இத்தகைய சிறப்பான நிர்வாக அணுகுமுறைகளின் அடிப்படையில் இம்மூவரையும் சிறந்த தலைவர்களாகத் தேர்வு செய்ததாக அவர் தெரிவித்தார்.
பா.ஜ.க முன்னாள் தலைவர் விமர்சனம்:
அபிஜீத் திப்கேவின் இந்த கருத்துகளுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, பா.ஜ.க.விலிருந்து விலகிய ஷெஹ்சாத் பூனாவாலா காணொலி ஒன்றை வெளியிட்டுச் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை கடுமையாகச் சாடியுள்ளார்.
குறிப்பிட்ட அந்த மூன்று தலைவர்களும் தங்களது மாநில மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் எனக் குறிப்பிட்ட அவர், இத்தகைய தலைவர்களைக் கரப்பான் பூச்சி ஜனதா கட்சித் தலைமை சிறந்த முதலமைச்சர்களாகத் தேர்வு செய்திருப்பதை விமர்சித்துப் பேசியுள்ளார்.

