அமெரிக்காவில் பணிபுரிய வழங்கப்படும் 'எச்-1பி' விசாவின் கட்டணத்தை ரூ.98 லட்சமாக அதிகரிக்க டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
வெளிநாடுகளைச் சேர்ந்த திறன்வாய்ந்த தொழிலாளர்களுக்காக அமெரிக்க அரசால் எச்-1பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசாவின் ஆரம்பக் காலம் 3 ஆண்டுகள் ஆகும். இதனை 6 ஆண்டுகள் வரை நீட்டித்துக் கொள்ள முடியும். அமெரிக்கா ஆண்டிற்கு 85,000 எச்-1பி விசாகளை வழங்குகிறது. இதில் 71 சதவீத விசாகளை இந்தியர்களே பெறுகின்றனர். சீனர்கள் 12 சதவீதமும், இதர நாடுகளைச் சேர்ந்தவர்கள் 17 சதவீத விசாகளையும் பெறுகின்றனர்.
கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரியில் அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு, எச்-1பி விசா நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு எச்-1பி விசா கட்டணம் ₹1.9 லட்சத்திலிருந்து ₹88 லட்சமாக உயர்த்தப்பட்டது. அமெரிக்க நிறுவனங்களில் வெளிநாட்டு மென்பொருள் பொறியாளர்கள் பணியில் சேருவதைத் தடுக்கவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால், அமெரிக்காவின் பல்வேறு நீதிமன்றங்கள் இந்தக் கட்டண உயர்வுக்குத் தடை விதித்தன. தற்பொழுது இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் உள்ளதால், எச்-1பி விசாவுக்கு ₹1.9 லட்சம் முதல் ₹4.7 லட்சம் வரை மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சூழலில், அமெரிக்க உள்துறை பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் அதிபர் டொனால்டு டிரம்பிடம் புதிய பரிந்துரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில், எச்-1பி விசா கட்டணத்தை ₹98 லட்சமாக அதிகரிக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வை நடப்பாண்டு இறுதிக்குள் அமல்படுத்த அதிபர் டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

