கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், கோவில்பட்டி ரோட்டரி சங்கம் மற்றும் தூத்துக்குடி அஸ்ட்ரோ கிளப் சார்பில் தேசிய விண்வெளி தின விழா நடைபெற்றது.

நிலவின் தென் துருவத்தில் இஸ்ரோவின் ‘சந்திரயான்-3’ விண்கலம் 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 அன்று வெற்றிகரமாகத் தரையிறங்கி சாதனை படைத்தது. நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை இறக்கிய முதல் நாடு என்ற பெருமையையும், நிலவில் மென்மையாகத் தரையிறக்கிய 4-ஆவது நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றது.

விக்ரம் லேண்டர் தரைதொட்ட இடத்திற்குப் பாரதப் பிரதமரால் ‘சிவசக்தி’ எனப் பெயரிடப்பட்டதுடன், ஆகஸ்ட் 23-ஆம் தேதி தேசிய விண்வெளி தினமாக அறிவிக்கப்பட்டது. தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு, பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த விண்வெளிக் கண்காட்சியில் மாணவிகள் தங்களது அறிவியல் திறமைகளை வெளிப்படுத்தினர். விக்ரம் லேண்டர், நிலா, விண்வெளி ஓடம் மற்றும் சூரியக் கடிகாரம் போன்ற பல்வேறு மாதிரிகளை மாணவிகளே சொந்தமாகச் செய்து கண்காட்சியில் காட்சிப்படுத்தினர்.

விண்வெளி தின வினாடி வினாப் போட்டியில் பங்கேற்ற மாணவிகளுக்குச் சான்றிதழ்களும், தேசிய விண்வெளி தின விழிப்புணர்வுச் சுவரொட்டிகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்குச் பள்ளித் தலைமையாசிரியர் சஜீலா பீவி தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்டச் சாலை பாதுகாப்புப் பிரிவுத் தலைவர் முத்துச்செல்வம், இயற்பியல் ஆசிரியை கமலா ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோவில்பட்டி ரோட்டரி சங்கத் தலைவர் முத்து முருகன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குச் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க உறுப்பினர் நடராஜன் உட்படப் பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.